Header Ads

பௌத்த மாவட்டமாக மாறுகின்றது திருமலை - சுமந்திரன் எம்.பி. விசனம்


திருகோணமலை மாவட்டத்தை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்ட காலத் திட்டம் இப்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கிளைத் தலைவர் எஸ்.குகதாஸன் தலைமையில் நேற்று பல்வேறுபட்ட சந்திப்புக்கள் நடைபெற்றன. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் மக்கள் இங்கே வருகை தந்து தங்களுடைய பல பிரச்சினைகளை எமக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றார்கள்.

இதில் பிரதானமான பிரச்சினையாக நில அபகரிப்பு தொடர்பிலேயே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதேவேளை, மூதூர் கங்குவேலி குளத்தை ஆக்கிரமித்து அந்தக் குளத்தை நம்பி விவசாயம் செய்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களுடைய விவசாய செய்கையைக் குழப்பும்  நோக்கில் குளத்தில் காணப்பட்ட நீரை வெளியேற்றி குளத்துக்குள்ளேயே வேற்று இனத்தவர்கள் வருகை தந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுத்து மூலமாகக் கொடுக்கப்பட்டிருந்தும் எதுவித நடவடிக்கை  எடுக்கவில்லை. நீர்ப்பாசன அதிகாரிகளிடம் முறையிடுமாறு பொலிஸார் கூறுகின்றனர். எனினும், அவர்களிடத்தில் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தை ஒரு பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்ட காலத் திட்டம் இப்போது துரிதகதியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. விசேடமாக குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 30 இற்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதில் 23 இடங்களில் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. பௌத்த மக்கள் வாழாத இடத்தில் கூட புத்தர் சிலைகளை நிர்ணயிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண ஆளுநர் தடை விதித்தாலும் கூட பாதுகாப்புப் பிரிவின் அனுசரணையுடன் நிர்மாண வேலைகள் இடம்பெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.