Header Ads

மனிதப்புதைகுழி ஆகழ்வு பணிகள் தற்காலிக இடைநிறுத்தம்: இதுவரை 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் அகழ்வாய்வுப்பணிகளை ஒக்டோபர் மாத மூன்றாவது வாரத்தில் மீளவும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் ஈடுபட்டுவந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேறு பணிகளுக்கு செல்லவிருப்பதால், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்படுகின்றன என  முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுவரை ஒன்பது நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் தாம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கினால் தாம் தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம் என்றும் அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று  முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் கெங்காதரன் முன்னிலையில், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த ஒன்பதாம்நாள் அகழ்வாய்வுகளில் மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. தடையப் பொருளாக விடுதலைப்புலிகள் அமைப்பின் இலக்கத் தகடொன்றும், ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை ஒன்பது நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் மொத்தமாக 17மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகளின் நிறைவில், குறித்த மனிதப் புதைகுழி ட்ரோன் கருவியைப் பயன்படுத்தி காணொளி எடுக்கப்பட்டதுடன், விரிப்புக் கொண்டு மூடப்பட்டது. குறித்த விரிப்பின் விளிம்புப் பகுதிகளில் மண் இடப்பட்டுள்ளன.

மேலும் குறித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க முல்லைத்தீவு இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி ஆகியோர் குறித்த மனிதப்புதைகுழி வளாகத்திற்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

No comments

Powered by Blogger.