நீச்சல் தடாகத்தில் மூழ்கி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு
ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவர் ஒருவர் நேற்று(27) உயிரிழந்துள்ளார்.
ரஜரட்டை பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த முருகதாஸ் திலக்சன் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
மூர்ச்சையடைந்த மாணவனுக்கு ஏனைய சில மாணவர்கள் முதலுதவி அளிப்பதை கண்ட பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர், உயர் அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து மாணவன் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்திருந்ததாகவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் மிஹிந்தலை பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ரஜரட்டை பல்கலைக்கழக நீச்சல் தடாகம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த மாணவர்கள் அனுமதியின்றியே நீச்சல் தடாகத்தில் நீராடியதாக பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் G.A.S.கினிகத்தர தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் நீச்சல் தடாகத்திற்குள் பிரவேசிக்கும் போது உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை துணையாக அழைத்துச் செல்லும் நடைமுறை வழமையாக பின்பற்றப்பட்டு வந்ததாக பல்கலைக்கழக துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
No comments