Header Ads

நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி அடைந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா பிரேரணை மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20 ஆம் திகதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். 

இதற்கிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது . 2 ஆம்  நாளாக புதன்கிழமையும் விவாதம் தொடர்ந்தது. இதில் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, கொம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, என்.சி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார். இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியிருந்தனர். 

இந்த நிலையில், மூன்றாவது நாளான நேற்று நம்பிக்கை இல்லா பிரேரணையின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசினார்.

நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு பிரதமர் மோடி பதிலளித்துக் கொண்டிருந்தபோதே ராகுல் காந்தி, சோனியா காந்தி வெளியேற, அவர்களுடன் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. வெளியே வந்த சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் வெளிநடப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், என் கட்சி இது குறித்து விளக்கும். பிரதமர் மணிப்பூர் பிரச்சினை பற்றி பேசவே இல்லை என்று தெரிவித்துள்ளார். 




No comments

Powered by Blogger.