'அம்மா.. நான் இறந்து கொண்டிருக்கிறேன்': கத்திக்குத்துக்கு உள்ளான சிறுவன் உருக்கம்!
ஆஸ்திரேலியாவில் கொள்ளைக் கும்பல் ஒன்றினால் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தாக்குதலுக்குள்ளான நிலையில் தாயாருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து 'அம்மா... நான் இறந்து கொண்டிருக்கிறேன்என நினைக்கிறேன்...' என கூறியுள்ளார்.
மெல்போர்னில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 16 வயதான ரயன் சிங் என்ற சிறுவனே இவ்வாறு கொள்ளை கும்பலினால் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
இவருக்கு இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் ஆகும். அன்றைய தினம் ரயன் சிங் தனது இரண்டு நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது கையில் கத்திகளுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல் மூவரையும் தாக்கியது.
ரயனை விலா எலும்புகள், கைகள், மற்றும் முதுகில் குத்திய நிலையில் அவரது தலையின் பின்புறத்திலும் அடிபட்டது.
தொடர்ந்து அவர்களிடம் இருந்த நைக் ஏர் ஜோர்டான் ஸ்னீக்கர்கள், செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து கொண்டு கும்பல் தப்பி ஓடியது.
இதையடுத்து மூவரும் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 20 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனிடையில், கத்தி குத்துக்கு பின்னர் கீழே சரிந்து விழுந்த ரயன் தான் இறந்துவிடுவேன் என நினைத்துள்ளார்.
இதையடுத்து தனது தாயாருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, “அம்மா உன்னை மிகவும் நேசிக்கிறேன், நான் இறந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன், நான் கத்தியால் குத்தப்பட்டுள்ளேன்” என பேசியதாக தெரியவந்துள்ளது.
No comments