Header Ads

வவுனியாவில் வீதி விபத்து: ஒருவர் பலி!

 வவுனியா - ஏ9 வீதி ஓமந்தை பகுதியில் உள்ள இராணுவ மற்றும் பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனார்.

மற்றும் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஓமந்தை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஏ9 வீதி ஒமந்தைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ மற்றும் பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் வாகனம் ஒன்று பழுதடைந்து நின்றுள்ளது.

அதனை வவுனியா நகர் நோக்கி உள்ள வாகனம் திருத்தும் இடத்திற்குக் கொண்டு செல்வதற்காக உழவு இயந்திரத்தினூடாக கட்டி இழுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது அதே திசையில் பயணித்த பார ஊர்தி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரம் மற்றும் பழுதடைந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வாகனத்தைக் கட்டி இழுக்க முயற்சி மேற்கொண்ட 23 வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்து அம்பியுலன்ஸ் வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.




No comments

Powered by Blogger.