Header Ads

கோரிக்கையை நிராகரித்து இலங்கை அரசுக்கு மறுப்புக் கடிதம்



கொரோனா வைரஸ்சிற்கு எதிரான தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது குறித்து தனியார் துறை முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உலகின் முன்னணி தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

அஸ்ட்ராசெனகாவின், ஆசியாவிற்கான பொது விவகார உதவி பணிப்பாளர் ஜோஸ்பர் மெயின்ஸ், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ராசெனகா தயாரித்த கொரோனா தடுப்பூசியை சந்தைப்படுத்த பல தனியார் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் இலங்கை அரசுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதை அறிந்துகொண்டுள்ளதாக ஜோஸ்பர் மெயின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காரணத்திற்காகவே தான் இந்த கடிதத்தை அனுப்புவதாக ஜோஸ்பர் மெயின்ஸ் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் கொரோனா தொற்றுநோயை விரைவில் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கும் சர்வதேச சுகாதார நிறுவனங்களுக்கும் தடுப்பூசியை வழங்குவதையே தமது நிறுவனம் நோக்கமாக கொண்டு செயற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த தடுப்பூசியை தற்போது தனியார் துறைக்கு வழங்கவோ, விநியோகிக்கவோ நடவடிக்கை எடுக்கப்போவது இல்லையென, அஸ்ட்ராசெனகாவின், ஆசியாவிற்கான பொது விவகார உதவி பணிப்பாளர் ஜோஸ்பர் மெயின்ஸ், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறை குறித்த தடுப்பூசியை விநியோகிப்பதாக வெளியாகும் விளம்பரம் குறித்தும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

அஸ்ட்ராசெனகாவைத் தவிர வேறு எந்தவொரு வர்த்தக நிறுவனமும், தனியார் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை மேற்கொண்டால், அது போலியான தடுப்பூசியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதுபோன்ற சந்தர்ப்பத்தில் குறித்த தடுப்பூசியை நிராகரிக்க வேண்டும் என்பதுடன், அது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கோவெக்ஸ் திட்டம், யுனிசெப் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா ஆகியவை மாத்திரமே இலங்கைக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறையையும் அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தது.

தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பணியிடங்களிலிருந்து கொரோனா தொற்று அதிகமாக பதிவாகி வருவதால், உழைக்கும் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதே அடுத்த முன்னுரிமை நடவடிக்கையாக இருக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.