Header Ads

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரிப்பது வெட்கக்கேடானது- அநுரகுமார



உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவித்த இந்த அரசாங்கம் தற்போது அதனை நிராகரிப்பது வெட்கக்கேடான விடயம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை அரசாங்கத்தில் இருக்கும் சிலர் நிராகரித்து வருகின்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையை முழுமையாக நம்பிக்கை வைத்து, தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்துவந்த அரசாங்கமே இன்று அறிக்கையை நிராகரித்து வருவது வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

ஜனாதிபதி தேர்தலின்போது தேர்தல் மேடைகளில் திரும்பத்திருப்ப பேசப்பட்ட விடயம்தான் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாகும். அதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையே அவர்கள் நம்பியிருந்தனர்.

அத்துடன் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

தற்போது அறிக்கை வெளியில் வந்ததுடன் அதுதொடர்பில் பல்வேறு தரப்பினர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்துக்கும் வேறுவழியின்றி தற்போது குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது எனத் தெரிவித்து வருகின்றது.

அப்படியானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களுக்கு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என கேட்கின்றோம்.

அதேபோன்று முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பல நபர்கள் இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள். இதுதொடர்பில் போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும், இவர்கள் தேர்தல் மேடைகளில் பகிரங்கமாகத் தெரிவித்துவந்தனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தில் இருப்பவர்களே இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பூரணமில்லாமல் இருப்பதாகத் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் நாங்கள் வெட்கப்படுகின்றோம் எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.