Header Ads

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி

 


இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

2019-2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தின்’ ஏற்பாடுகளுக்கமைய 50 ரூபா நிலையான விலைக் கொடுப்பனவு உள்ளிட்ட 750 ரூபா நாளாந்த சம்பளமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் நியம கிலோகிராம் அளவு அதிகரிக்குமாயின் ‘Over Kilo Rate’ எனும் பெயரில் மேலுமொரு கொடுப்பனவுடன் சேர்த்து தோட்டத்தொழிலாளர்கள் தற்போது சம்பளமாகப் பெற்று வருகின்றனர்.

2020 நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்தச் சம்பளமாக 1000 ரூபா வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.

அதனை நடைமுறைப்படுத்துவதற்காக ‘2019 – 2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும், குறித்த கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினரான பெருந்தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை முதலாளிமார் சம்மேளனம் நாளாந்த சம்பளத்தை 920 ரூபா வரை அதிகரிப்பதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் சம்பளக் கட்டுப்பாட்டு சபை மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.