தடுப்பூசிகளிற்கான இடைவெளி அதிகரிப்பு
அயல் நாடுகள் கூட, பல மில்லியன் தடுப்பு ஊசிகளைப் போட்டுள்ள நிலையில், பிரான்ஸ் இன்னமும் முதற்கட்ட அலகு தடுப்பு ஊசிகளின் எண்ணிக்கையில் ஒரு மில்லியனைக் கூடத் தாண்டவில்லை.
பிரான்சில் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட மருத்துவத் துறையினர், தீயணைப்பு மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவினர், ஆபத்தான நோய்களுடன் இலகுவாகத் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளவர்கள் (vulnérables) ஆகியோரிற்கு மட்டுமே தற்போது கொரோனத் தடுப்பு ஊசிகள் போடப்படுகின்றன.
இது வரை முதலாவது அலகு கொரோனாத் தடுப்பு ஊசிக்கும், இரண்டாவது அலகு தடுப்பு ஊசிக்கும் இடையிலான காலப்பகுதி, மூன்று வாரங்கள் முதல் சில இடங்களில் மிக அதிகமாக நான்கு வாரங்கள் வரை மட்டுமே நடைமுறையில் உள்ளது.
ஆனால் பிரான்சின் உயர் சுகாதார ஆணையமான HAS (Haute autorité de santé) இந்த இடைவெளியை ஆறு வாரங்களாக அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது முதற்கட்ட அலகு போடப்பட்டவர்களிற்கு, ஆறு வாரங்களின் பின்னரே அவர்களிற்கான இரண்டாவது அலகு போடப்படும்.
இந்த இடைவெளியை அதிகரிப்பதன் மூலம், ஆபத்தான நோய்களுடன் இலகுவாகத் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளவர்கள் ஏழு இலட்சம் பேரிற்கு முதல் அலகுத் தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்ள முடியும் எனவும், அதன் மூலம் அவர்களையும் பாதுகாக்க முடியும் எனவும் HAS தெரிவித்துள்ளது.
ஆனால் தடுப்பு ஊசிகளின் விநியோகங்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள தாமதம் மட்டும் ஏனோ இன்னமும் பிரான்சினால் நிவர்த்திசெய்யப்படவில்லை!
No comments