Header Ads

மனிதப் புதைகுழி; மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் மீட்பு!


கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக நேற்று (07) முன்னெடுக்கப்பட்டிருந்த அகழ்வுப் பணியின் போது மேலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையின் வடக்கு மாகாணம் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன்  கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த ஜூலை-06 இடம்பெற்ற நிலையில் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில், மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்காணப்பட்டன.

இதையடுத்து குறித்த மனித புதைகுழி பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் குறித்த அகழ்வு பணியினை தொடர தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 31ம் திகதி இடம்பெற்றிருந்தது.

நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அன்றைய தினம் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் செப்டெம்பர்-05 அம் திகதி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மற்றும் கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் செப்டெம்பர்-05 அம் திகதி கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக அன்றயை தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்க முடியாத நிலையில் மறுநாளான 6ம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

இதற்கமைய, முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் நேற்று முன்தினம் (06) ஆரம்பமாகின.

இந்நிலையில், நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின் போது மனித எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளில் இடம்பெற்று அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இரண்டாவது நாளாகவும் இன்று (07) கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்றிருந்து. இதன்போது மேலதிகமான மனித எலும்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்ந்தும் நாளை அகழ்ந்தெடுக்கப்படும். இன்று வேறு சில முக்கியமான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று அது தவிர கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்கள் பகுத்தறிந்ததன் பிற்பாடே அறியத்தரப்படும். 

எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் முழுவதுமாக இன்னும் எடுக்கப்படவில்லை பகுதியளவிலேயே எடுக்கப்பட்டுள்ளது. உடுப்புக்களில் சில தடயம் இருக்கின்றது இதனை விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் தான் இது தொடர்பாக கூறமுடியும். 

ஒன்று அல்லது இரண்டு தான் நாம் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாது ஏனெனில் முழுவதுமாக எடுத்ததன் பின்னர் தான் எத்தனை என கூறமுடியும் .

மனித புதைகுழிக்குள் இருந்து தான் துப்பாக்கி சன்னம் எடுக்கப்பட்டது. இரண்டு துண்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. அது துப்பாக்கி சன்னம் என்றே சந்தேகிக்கப்படுகின்றது. அடையாளங்களும் இருக்கின்றது அது பகுப்பாய்வு செய்ததன் பின்னர் தான் தெரிவிக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

குறித்த சம்பவ இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர் முன்னிலையில் அகழ்வு பணி நடைபெற்றிருந்தது.

குறித்த அகழ்வு பணியின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திர பிரகாஷ், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை, இன்று (08) வெள்ளிக்கிழமை அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.