Header Ads

கனடா தூதரக பணியாளர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் மிரட்டல்!


இந்தியாவிற்கான கனடா தூதரகம் தனது பணியாளர்கள் சமூக ஊடகங்களில் மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளனர். 

இதனால், தனது பணியாளர்களின் எண்ணிக்கை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது என இந்தியாவிற்கான கனடா தூதரகம்  அறிவித்துள்ளது.

இந்தியா தனது தூதரக இராஜதந்திரகள் மற்றும் பணியாளர்களிற்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும்   கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தியாவிற்கான கனடா தூதரகமும்  துணை தூதரங்களும் தொடர்ந்தும் திறந்திருந்து சேவைகளை வழங்கும் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்கும் நடவடிக்கையை நிறுத்தம் செய்யபட்டுள்ளது என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கனடாவிற்கான விசா வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தனியார் நிறுவனமான பிஎல்எஸ் இன்டர்நேஷனல் தனது இணையதளத்தில், இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு. செயல்பாட்டுக் காரணங்களுக்காக மறு அறிவிப்பு வரும் வரை இந்திய விசா சேவை நிறுத்தப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு பிஎல்எஸ் இணையதளத்தைப் பாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப் பிரிவின் தலைவரும் தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் புகைப்படங்களுடன் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவிற்கான கனடா தூதரகம், தனது பணியாளர்கள் சமூக ஊடகங்களில் மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. அத்துடன், தனது பணியாளர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கவுள்ளோம் என  அறிவித்துள்ளது.

கனடா நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய அரசின் முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன என்று கூறினார்.

ஆனால் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. கனடாவில் நிகழ்ந்த வன்முறைச் செயலுக்கு இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அபத்தமானது. இது உள்நோக்கம் கொண்டது.

இதற்கு முன்பும் இதுபோனற குற்றச்சாட்டுகள் கனடா பிரதமரால் இந்திய பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டன. அப்போதே அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன என்று இந்திய வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




No comments

Powered by Blogger.