உத்தரபிரதேச துணை முதல்வருடன் ‘ஜெயிலர்’ படம் பார்த்தார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் அதிக பிரபலம் அடைந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் ஓகஸ்ட் 9 ஆம் திகதி இமயமலைக்கு புறப்பட்டார். இங்கு பத்ரிநாத், பாபா குகை உள்ளிட்ட முக்கிய இடங்களை தரிசித்தார்.
இதையடுத்து அவர் ஜோர்க்கண்ட் மாநிலம் சென்று அங்கு தமிழரான ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். சின்னமஸ்தா எனும் இடத்திலுள்ள சக்தி பீடமான காளி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவுக்கு சென்றார்.
உத்தரபிரதேசத்தில் ரஜினிகாந்தின் மூன்றுநாள் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. லக்னோ விமான நிலையம் முதல் திரும்பச்செல்லும் வரை அவருக்கு அரசுத் தரப்பு சிறப்பு மரியாதை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. லக்னோவில் தாஜ் நட்சத்திர விடுதியில் ரஜினிகாந்த் நண்பர்களுடன் தங்கியுள்ளார்.
இதேவேளை, ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் லக்னோவில் பி.வி.ஆர். திரையரங்கத்தில் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் ‘ஜெயிலர்’ சிறப்புக் காட்சியை கண்டு மகிழ்ந்துள்ளனர்.
அத்துடன் ரஜினி மற்றும் அவரது மனைவி லதாவை முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வீட்டுக்கு அழைத்து கலந்துரையாடியுள்ளார். அப்போது, முதல்வர் யோகியின் காலில் விழுந்து வணங்கிய ரஜினி அவருக்கு பூங்கொத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments