Header Ads

அடி ஆழம் அறியப்படாத நிலாவரை கிணறு (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

 நிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா? பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக் கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது பொக்கிசங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? நிலாவரையின் வரலாற்றை அறிய தொடர்ந்து படியுங்கள்.

புத்தூர் – சுன்னாகம் இணைப்பு வீதியும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் இராசவீதியும் சந்திக்கும் இடத்தில் சிவன் கோவில் ஒன்றும் அதன் அருகில் ஆழக் கிணறொன்றும் உள்ளன. இந்தச் சிவன் கோவில்தான் தட்சிண கைலாய புராணத்தில் சொல்லப் பட்ட நவசைலேஸ்வரம் எனப்பலர் நம்புகின்றனர். அந்தக் கிணறுதான் நிலாவரைக்கிணறு.

ஈழத்தில் சிவ வழிபாட்டின் தொன்மையைப் பறைசாற்றக் கூடிய தலங்கள் பல உள்ளன. போர்த்துக்கேயரது படையெடுப்பின்போது சிவத்தலங்கள் எல்லாம் முற்றாக அழிக்கப்பட்டன. நவசைலேஸ்வரம் என்ற சிவத்தலத்திற்கும் இக்கதி நேர்ந்தது.

ஆயினும் தட்சண கைலாய புராணத்தில் குறிப்பிடப்படும் நவசைலேஸ்வரம் புத்தூர் சிறீ சோமாசுகந்தக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சிவன் கோவில்தான் என அக்கோவில் சார்ந்தவர்கள் குரல் எழுப்புகின்றனர். அக்கோவிலுக்கும் நிலாவரை நீர்நிலையே தீர்த்தக் கேணியாக விளங்கியிருக்கிறது. (பின்னர் புத்தூர் மழவராயர் காலத்தில் ஆலயத்தில் தீர்த்தத் தடாகம் அமைக்கப்பட்டது).

நிலாவரைக் கிணற்றுக்கு பக்கத்தில் உள்ள சிறிய சிவன் கோவிலுக்கு அருகிலும் புராதன நவசைலேஸ்வரம் இருந்தமைக்கான சில எச்சங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புராதனச் சிறப்புக்கள் இந்த ஆலயத்திற்கு இருந்தாலும் ஆலயம் பற்றிய போதிய விழிப்புணர்வை இப்பிரதேச மக்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் எனக் கருத முடியாதுள்ளது.

தற்போதும் மடாலயமாகவே விளங்கும் இக்கோவிலில் 1948 இல் தான் சிவலிங்கத் தாபனம் இடம்பெற்றது. எதிர்பாராத விதமாக ஆலயத்தின் உள் கிணற்றில் இருந்து சிவலிங்கம் ஒன்றைப் பெற்றனர். இது பண்டைக்கால நவசைலேஸ்வரத்துக்குரிய சிவலிங்கமென நம்பப்படுகின்றது. போர்த்துக்கேயர் நவசைலேஸ்வரத்தை அழித்தபோது, அங்கிருந்த விக்கிரகங்களை சிலர் பாதுகாப்பாக இந்தக்கிணற்றில் போட்டதாக கர்ணபரம்பரையாக கதைகள் உள்ளன. கிணற்றில் இருந்து பெற்ற சிவலிங்கத்தை அக்காலத்தில் ஆலயப் பூசகராக விளங்கிய வேலுப்பிள்ளை சுப்பையா ஆலயத்தில் நிறுவிப் பூசை வழிபாடுகளை ஆற்றத் தொடங்கினார்.

இன்று அர்ச்சகர் ஒருவரால் நித்திய பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலயத்தின் நேர்முன்னாகத் தீர்த்தமாடுவதற்கு வசதியாக நிலாவரைக் கிணற்றில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டும் உள்ளன.
நிலாவரையின் மேற்குப் புறமாக உள்ளது நவக்கிரிக் கிராமம். நிலவரை என்பதே நிலாவரை ஆகியிருக்கலாம். (வரை – மலை).

நவக்கிரி என்பதும் ஒன்பது மலைகள் என்ற பொருளைத் தருகின்றது. நவசைலேஸ்வரம் என்ற பெயரின் பொருளும் அதுவே. (சைலம் – மலை) இப்பகுதி நிலங்களின் கீழ்க் கடுமையான கற்பாறைகள் உள்ளன. இதனால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். இல்லையேல் கீரிமலை என்ற பெயர்க் காரணத்திற்குக் கூறப்படும் விளக்கம் போல என்றோ ஒரு நாள் இப்பகுதியில் குன்றுகள் இருந்திருக்கலாம்.

நிலாவரை தொடர்பாக நிலவும் கர்ண பரம்பரைக் கதையும் சுவையானது. இராமாயணக் கதைத் தலைவனான இராமபிரான் இராவணனுடன் போர் புரிவதற்காக இலங்கை வந்தபோது தனது வானரப் படையினரின் நன்னீர்த் தாகத்தைப் போக்குவதற்காக அம்பை ஊன்றி நீர் எடுத்த இடமே நிலாவரை என்கின்றனர்.

நிலாவரை மாத்திரமன்றி இன்னும் இதுபோன்ற வற்றாத கிணறுகள் பல குடாநாட்டில் காணப்படுகின்றன. ஊரெழுவில் பொக்கணைக் கிணறு, மானிப்பாயில் இடிகுண்டுக் கிணறு, கரவெட்டியில் அத்துளுக் கிணறு, குரும்பசிட்டியில் பேய்க்கிணறு என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான கிணறுகள் பற்றிப் புவியியலாளர்கள் சொல்லும் விளக்கமும் சுவாரசியமானது. யாழ்க் குடாநாடு மயோசீன் காலச் சுண்ணக் கற்களாலானது. நீரைக் கசியவிடும் தன்மை இக்கற்களுக்கு உண்டு. மழைநீர் உட்கசிந்து வன்மையான பாறைகளில் தரைக்கீழ் நீராக இருக்கின்றது. மழைநீர் வளியூடாகப் பெய்யும்போது வளியில் உள்ள காபனீரொட்சைட்டுடன் கலக்கின்றது. அதனால் அம்மழைநீர் காபோனிக்கமிலமாக மாறுகின்றது.

சுண்ணக் கற்களில் உள்ள கல்சியம் காபனேற்றும் காபோனிக்கமிலமும் சேர்ந்துகொள்வதால் கல் கரையும் வாய்ப்பைப் பெறுகின்றது. இதன் காரணமாகச் சுண்ணக் கற்பாறைகளைக் கரைத்து நீர் உட்செல்கின்றது. பாறைகள் கரையும் போது பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பெருமளவு நீர் தேங்கி நிற்க அவையே வற்றாக் கிணறுகள் ஆகின்றன.
தற்போதுள்ள நிலாவரைக் கிணறு 52 அடி நீளம், 37 அடி அகலம் கொண்டு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது.

நிலமட்டத்தில் இருந்து 14 அடி ஆழத்தில் நீர் காணப்படுகின்றது. இந்நீர்நிலை தொடர்பாக பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பிரித்தானியா, யேர்மனி, செக் குடியரசு இப்படியான நாடுகளில் இருந்து வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இதன் ஆழம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் ஆழம் 382 அடியைவிட அதிகமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இங்குள்ள நீர் 31 அடிவரையான ஆழத்திற்கு நன்னீராக உள்ளது. அதன்கீழ் 81 அடிவரையும் உவர் தன்மையானதாகவுள்ளது. அதன்கீழ் நிலத்தடி நீரோட்டத்துடன் நீர் தொடர்புபட்டுள்ளது. இந்த நீர்நிலை தற்போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் பராமரிக்கப்படுகின்றது. இவ்வாறு நீரோட்டத் தொடர்பு இருப்பதால் மழை காலங்களில் நீர் அதிகரிப்பதுமில்லை. கோடைகாலங்களில் நீர்வற்றுவதுமில்லை. என்றும் சம நிலை தளம்பாத அருங்குணத்துடன் நிலாவரைக் கிணறு காணப்படுகின்றது.

நிலாவரை நன்னீர் வளத்தை குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் முயற்சிகள் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டன. கிணற்றின் தெற்குப் புறமாக உள்ள சிறுப்பிட்டி மற்றும் மேற்குப் புறமாக உள்ள அச்செழு, ஈவினைக் கிராம விவசாயிகள் இக்கிணற்றில் இருந்து நன்னீர் வளத்தைப் பெற்று விவசாய முயற்சியில் ஈடுபட்டனர்.

இப்பிரதேசங்களில் இந்நீரை ஆதாரமாகக் கொண்டு வாழை, நெற் பயிர்ச் செய்கைகள் சிறப்பாக இடம்பெற்றன. 1990 கள் வரை இவ்வாறான நீர்ப்பாசனங்கள் இடம்பெற்றுள்ளன. 1950 களின் பின் டீசல் இயந்திரங்கள் மூலமும் மின்சாரம் மூலமும் நீரை இறைத்தனர். இங்கு நீர் விநியோகம் இடம்பெற்றமைக்கான சுவடுகள் இன்றும் உள்ளன.

முறையான நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிலாவரைக் கிணற்றில் இருந்து இதனை அண்டிய பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனத்தைச் சீராக மேற்கொள்ள முடியும்.




No comments

Powered by Blogger.