Header Ads

கொரோனா பாதிப்பு; இந்தியாவைபோன்று இலங்கையிலும் அபாயம் ஏற்படலாம் என அச்சம்


நாட்டில் தினசரி 1000ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில்இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் ,

வெள்ளியன்று 1600 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்தியாவில் தற்போதுள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு முன்னாயதங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். எனினும் அங்குள்ள நிலைமையைப் போன்று ஏற்படக் கூடிய அபாயமும் உண்டு.

எனவே தொற்றுக்கான ஏதேனுமொரு அறிகுறி காணப்படுபவர்கள் அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதேவேளை ஏதேனுமொரு வகையில் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்குமானால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது. இந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் அவர்கள் சார்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக முக்கியத்துவமுடையதாகும்.

வெள்ளியன்று 11 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இலங்கைக்குள்ளும் கொவிட் பரவலானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது. தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் கடந்த நாட்களில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் நிலை ஏற்படுமாயின் ஒரு தடுப்பூசியையேனும் வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உலக சுகதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.