Header Ads

மழைக்கு மத்தியிலும் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்!



கிளிநொச்சியில் கடும் மழைக்கு மத்தியிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்று (சனிக்கிழமை) 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த தீச்சட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகியுள்ள நிலையில்,  ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் நோக்கி நகர ஆரம்பித்துள்ளதுடன், கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் நிறைவடையவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், தமக்கான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, சர்வதேசமே பதில் சொல், வேண்டும் வேண்டும் உறவுகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் குறித்த போராட்டத்தில்  கலந்துகொண்டு தங்களிற்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதற்கமைய பல்வேறு தரப்பினரின் பங்கபற்றலுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.