Header Ads

வடக்கு இளைஞனிற்கு 10 ஆயிரம் கோடி ரூபா பணம் வந்ததா? உண்மை என்ன?



பத்தாயிரம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக ஆறு பேர் நேற்று முன்தினம் (16) வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

வவுனியா நெளுக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக்கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவிசெய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம் 6 ஆம் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கிவந்துள்ளார்.

இதேவேளை கொழும்பில் வைத்து அவரது வங்கிகணக்கில் பத்தாயிரம் கோடி மதிப்பிலான இலங்கை ரூபாய் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு இளைஞரிடம் தெரிவித்துள்ளது. எனினும் பணம் எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று குறித்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்ட அந்த குழுவினர் பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளனர். குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிற்கு குறித்த விடயம் தெரியப்படுத்தப்பட்டது. பொலிசார் அந்த குழுவினரை கைதுசெய்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் குறித்த இளைஞனிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மத்திய வங்கிக்கும் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட 6 நபர்களும் கொழும்பு, அவிசாவளை, குருநாகல், மற்றும் வவுனியா போன்ற பகுதிகளை வசிப்பிடமாக கொண்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய மூன்று சொகுசு வாகனங்களும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தால் அவரை கடத்ததிச்செல்லும் நோக்குடன் அந்த குழு வந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து, கொழும்பு சிங்கள ஊடகங்கள் மத்திய வங்கி தரப்புடன் தொடர்பு கொண்டு, இது குறித்து தகவல் கேட்டுள்ளனர். இப்படியான பணபரிவர்த்தனையெதுவும் நடக்கவில்லையென மத்திய வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை பணம் வைப்பிலிடப்பட வாய்ப்பில்லையென்பதுடன், குறிப்பிட்ட பணபரிமாற்றம் எதுவும் மத்திய வங்கி ஊடாக நடக்கவில்லையென்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனால், இளைஞனை ஏமாற்றும் நோக்கில் பெரும் தொகை பணம் வைப்பிலிடப்பட்டதாக கூறப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.