Header Ads

மின்குமிழ் அணைத்து எண்ணை விளக்கில் இயங்கிய வலி கிழக்கு தவிசாளர் அலுவலகம்

 



வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணை விளக்கில் இயங்கியது.

இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில், இம் முறை இறந்தவர்களை பொது இடங்களில் நினைவில் கொள்வதை என்னையும் பிரதிவாதியாகக் கொள்ளப்பட்டு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாயிலாக நீதிமன்றம் தடைசெய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பினை நான் மதிக்கின்றேன். அதனை மீறமுடியாது. மீறுவது சட்டப்படியான குற்றமாகவுள்ளது.
 
மேலும் தவிசாளரான எனக்கு எதிராக மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கையினைக் கொண்டு மல்லாகம் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இத் தீர்ப்பிலும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த தவணையில் பொலிசாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இந் நிலையில் நினைவுகூறலை நீதிமன்றத்தீர்ப்பிற்புக்கும் அறிவுறுத்தலுக்கும் மதிப்பளித்து பொது இடத்தில் பிரதேச சபை உறுப்பினர்களுடன் வழமைபோன்று நான் மேற்கொள்ளவில்லை. இதேவேளை எமது ஆட்சிப் பிரதேசத்தில் உள்ள 75 ஆயிரத்து 334 பிரஜைகளுக்கும் நான் முதற் பிரஜை என்ற வகையில் எனது அலுவலக அறையின் மின்குமிழ்களை அணைத்துவிட்டு எண்ணை விளக்கில் எனது அலுவலகக் கடமைகளை ஆற்றினேன். 

எமது கோப்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்த செந்துரான் என்ற மாணவன் 5 ஆண்டுகளுக்கு முன் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னை மாய்த்துக் கொண்டார். அவரது இழப்பினை மனம் ஏற்றுக்கொள்ளாதபோதும் உயிர்நீத்த நிலையில் அவரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றேன் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.