Header Ads

கருத்தடை மருந்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தினால் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்குத் தயாராக இருக்கின்றேன்


கருத்தடை மருந்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தினால் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை நம்பிக்கை பொறுப்பு சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த மாதத்தில் நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் பௌத்தமதத் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் ஜம்இயத்துல் உலமா உள்ளிட்ட சகல மதத் தலைவர்கள் இணைந்து இந்த நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. சகல மதத் தலைவர்களும் ஒன்றிணைந்தே நாட்டில் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுக்க முடிந்தது.

அதேபோன்று முஸ்லிம் தலைவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்ததுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இட்மபெறாமல் பார்த்துகொள்ளவேண்டியுள்ளது. யுத்தத்தால் நாடு அழிவைச் சந்தித்துள்ளது. இந்தளவு அழிவுகளைச் சந்தித்த நாட்டை மீண்டும் அழிவைநோக்கி இட்டுச் செல்ல முடியாது. 

இனவாத, மதவாத, அடிப்படைவாதம் இல்லாத நாடாக டிசயற்படுவதன் ஊடாகவே சிங்கப்பூரைப் போன்று அபிவிருத்தியடைந்த நாடாக முடியும். மிகவும் சிறியதொரு குழுவே நாட்டில் குறிப்பாக இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலைமைக்கு பாராளுமன்றத்தில் உள்ள சகலரும் பொறுப்புக்கூற வேண்டும். 

கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் மீது நாமும், எம்மீது அவர்களும் விரல் நீட்டுவதைவிடுத்து நாட்டில் குழப்பங்களை ஏற்படாதிருப்பதற்கான பதிலை நாமே தேடவேண்டும். நாட்டில் மீண்டும் குழப்பம் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் உள்ள சகல இனத்தவர்களுக்கும் பாதுபாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

சகல இனங்களிலும் இனவாதம் உள்ள சிறிய குழுவினர் இருக்கின்றனர். இதனை தடுப்பதற்கே புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் கருத்தடை மருந்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தினால் உடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்த் தயாராக இருக்கின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.