Header Ads

இந்தியாவின் ஆதித்யா எல் -1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!


சூரியனை ஆராய்வதற்காக இஸ்ரோ விண்ணில் செலுத்திய ஆதித்யா-எல்1 விண்கலம் வெற்றிகரமாக பயணத்தை தொடர்கிறது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் விஞ்ஞானிகள் குழு என்பன இணைந்து வடிவமைத்துள்ளன.

இதில், வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி கழகம் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

இந்தநிலையில், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா - எல்1 விண்கலம் இன்று முற்பகல் 11.50 அளவில் விண்ணில் ஏவப்பட்டது.

சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா- எல்1 சுமார் ஆயிரத்து 475 கிலோகிராம் நிறையுடையதாகும். இதில் 7 வகையான ஆய்வு கருவிகள் உள்ளன.

பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள 'லோக்ராஞ்சியன் பொயின்ட் வன்' எனும் பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு மற்றும் காந்தப்புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை 'ஆதித்யா எல்-1' விண்கலம் மேற்கொள்ளவுள்ளது.

ஏவப்பட்டத்தில் இருந்து மூன்று படிநிலைகளை வெற்றிகரமாகக் கடந்த நிலையில் அது சரியான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்த நிகழ்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதன்பின்னர் விண்கலன் 125 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.