யாழில் அடையாளம் தெரியாத கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தி அட்டகாசம்!
யாழ்.நகரில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு, வீடு புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
யாழ்.நகரிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வாள்கள் மற்றும் கத்திகளுடன் வந்த கும்பலொன்று, வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த மோட்டார் வாகனம் உட்பட பல பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது. இதற்கும் மேலாக வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடாத்தி விட்டு குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.
இதனால் அச்சமடைந்த வீட்டில் உள்ளவர்கள், யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்தமையை தொடர்ந்து, அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்திய வீட்டிற்கு, யாழ்.மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
No comments