ஒரு லட்சம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தார் ஜனாதிபதி!
ஒரு லட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய சாரணர் நிகழ்ச்சித்திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.குறித்த திட்டத்தை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஆரம்பித்து வைத்தார்.
உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன்-பவல் பிரபுவின் 164 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் சிவப்பு சந்தன மரக்கன்றொன்று நடப்பட்ட பின்னர் கையடக்க தொலைபேசி மூலம் அது பதிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இலங்கை சாரணர் இயக்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின்படி நாடளாவிய ரீதியில் உள்ள 70,000 க்கும் மேற்பட்ட சாரணர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு அவற்றை கவனித்துக்கொள்வார்கள்.
‘துரு’ கையடக்க தொலைபேசி செயலியின் மூலம் இந்நிகழ்ச்சித்திட்டம் மதிப்பீடு செய்யப்படும்.
No comments